ரசனைக்காரன்

December 31, 2009

சித்திரவதைகள் of தமிழ் சினிமா

Filed under: சினிமா — rasanaikaaran @ 11:49 pm

சித்திரவதைகள் of  தமிழ் சினிமா

1. *ரீமிக்ஸ் படுகொலை : சிலம்பாட்டம் படத்தில் “வச்சுகவா” பாடலை ரீமிக்ஸ் என்ற பெயரில் படுகொலை செய்த யுவன் ஷங்கர் ராஜா.

2.*Dance படுகொலை : ஜிம்நாச்டிக்ஸ் பயிற்சியில் சிரமப்பட்டு சிம்பு ஆடுவது போல சிலம்பாட்டம் படத்தில் dance ஆடி சித்திரவதை செய்தது.

3.Over Acting Torture: சூர்யா மற்றும் சேரன். சேரன் மன்னிக்கவும் உண்மையைத்தான் சொல்லுகிறேன்

4.Herosim Torture: *சிம்பு( சிலம்பாட்டம் ) அமீர்( யோகி) மற்றும் விஷால்( சத்யம் , தோரணை)

5. Marketing Torture: மாசிலாமணி போன்ற கொத்துப்படங்களுக்கு Marketing செய்த சன் பிக்சர்ஸ்.

ஆறுதல் of  தமிழ் சினிமா

மிகப்பெரிய ஆறுதல்: விஜய்யின் வேட்டைக்காரன் படத்திலிருந்து  நிறைய பஞ்சர் dialogues-களை  நீக்கி மக்களை முடிந்தவரை காப்பாற்றியது நன்றி சன் பிக்சர்ஸ்

குறிப்பு:
* : சிம்புவின் சிலம்பாட்டம் 2008 ஆம் ஆண்டு டிசம்பரில்  வெளியாகிவிட்டதால் 2009 ஆம் ஆண்டுக்கு  சேர்த்துக்கொள்ளப்பட்டது!

ரசனைக்காரன் பாட்டுப் பட்டியல் 2009

Filed under: சினிமா — rasanaikaaran @ 9:27 pm

குறிப்பு:

** இந்த படங்கள் 2008 ஆம் ஆண்டு டிசம்பரில்  வெளியாகிவிட்டாலும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது!

விமர்சனக் குழு: ரசனைக்காரன், அக்க்ஷயா குருஷேவ், சகானா நாச்சியார்

November 7, 2009

அமீரின் யோகி.. சிறப்பு திரை முண்ணோட்டம்.

Filed under: சினிமா — rasanaikaaran @ 5:46 pm
Tags:

இயக்குனர் அமீர் திரைக்கதை, வசனம் எழுதி முதல் முறையாக கதாநாயகனாக நடித்து, யுவன் அழகான இசையில், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் வெளிவர இருக்கும் “யோகி” படத்தின் திரை
முண்ணோட்டம். அமீரின் இந்த இரண்டு வருட உழைப்புக்காக தமிழ் திரைத்ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்..

February 11, 2009

நான் கடவுள்…ஒரு திறனாய்வு அலசல்

Filed under: சினிமா — rasanaikaaran @ 11:57 am
Tags:

vmain-copy

நான் கடவுள்…?

அது இல்லை.. இது இல்லை..
அதனால்.. இதனால் படம் சரியில்லை..
மூன்று வருடம் உழைத்தற்காக வேண்டுமானால்..
அகோரமாக காட்டியதற்காக வேண்டுமானால்..
விளும்பு நிலை மனிதர்களை நடிக்க வைத்தற்கு வேண்டுமானால்..

பாலாவையும், அவரின் நான் கடவுளையும் பாராட்டலாம்!
என்று பல blogகளில் விமர்சனங்களாக எழுதப் பட்டு இருந்தது..

அவை அவரவரின் விமர்சனப் பார்வை..

நாங்கள் நான் கடவுளைப் பற்றி பொதுவான விமர்சனமாக எழுதாமல்…

அவற்றை வேறு விதமாக அணுகியுள்ளோம்.. அதில் சிலர் எழுதிய பொதுக் கருத்தையும், பலரின் உடன்படாதக் கருத்துகளையும் ஒரு சேர இணைத்து, ஒர் திறனாய்வு அலசலாக நான் கடவுள் திரைப்படத்தினை பற்றி தமிழகத்தின் மூத்த நாடகக் கலைஞர், விமர்சகர், தமிழ்ப் பல்கலைகழகத்தின் நாடகத் துறைப் பேராசிரியர் மு. ராமசாமி, அவர்களிடத்தில் அலசியிருக்கிறோம்..

இது ஒரு ஆடியோ உரையாடல்.. அய்யா அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள்… கீழே..

அலசல் 1..

1. நான் கடவுள் பற்றி?

2.விளிம்பு நிலை மனிதர்களை மட்டுமே பாலாவின் அனைத்துப் படங்களும் பேசுவதாகப் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்?

3.தமிழ் சினிமாவின் சாம்பிரதாயக் கோட்பாடுகளான ஹீரோ ஹீரோயின் கதாபாத்திரங்களை முன்னிறுத்திக் கதை சொல்லாமல்.. எதிர்மறை வாழ்வியலைக் காட்சியாக்குவது தான் பாலாவின் விருப்பமா?

அலசல் 2..

4.பாலாவின் முந்தையப் படங்கள் போல் இல்லாமல் கதாநாயகனுடைய (ஆர்யாவின்) கதாபாத்திரம் வலிமை இல்லாமல் குறைந்த ஆளுமைக்கு உட்பட்டு.. மொத்தக் கதையின் முடிவிற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போகிறதாகப் பார்வையாளர்கள் உணர்கிறார்கள்…

5.படத்தின் பிற்பகுதியில் பல காட்சிகளில் தொடர்பு இல்லாமல் இருப்பதாக ஓர் உணர்வு ஏற்படுகிறது..குறிப்பாக அம்சவல்லி மாதாகோயில் காட்சியும் அதற்கு அடுத்த காட்சியிலே அவர் அகப்பட்டுக்கொள்வதாக அமைத்துள்ள காட்சியும் முற்றிலும் தொடர்பு இல்லாதவாறு தோன்றுகிறதே?

6.ஜெயமோகனின் ஏழாவது உலகத்தின் சில உணர்வுகளை எடுத்து கொண்ட பாலாவின் இந்தப் படம் பெரிதாக எதையோ இழந்து இருப்பதாகவும்… அதற்கு ஏழாவது உலகத்தையே எடுத்திருக்கலாமே என்றும் சிலர் கருதுகிறார்கள்…

அலசல் 3..

7.புதியப் பாடல்களைப் பயன்படுத்தாமல் பாலா அதிகமாகப் பழையப் பாடல்களை பயன்படுத்துவதைக் குறித்து?

8.இளையராஜா….தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றி?

அலசல் 4..

9.வசனம்… ஜெயமோகன்?

10. படத்தைப் பற்றிய உங்கள் கருத்தினைப்  பாலாவிடம் கூறுனீ ர்களா?


இது நாள் வரையுமான திரைப்படம் சார்ந்த அனுபவங்களும், வாழ்வியல் அனுபவங்களும் எங்களுக்குள் உருவாக்கியிருகிற பார்வையின் வெளிப்பாடே இத்திறனாய்வு அலசல்.

….ரசனைக்காரன்


February 6, 2009

பாலாவின் நான் கடவுள் படத்தின் நேரடி தியேட்டர் ரிப்போர்ட்…

Filed under: சினிமா — rasanaikaaran @ 8:35 am

nkimages

ஒரு படம் எடுத்து மக்கள் மனதில் இடம் பிடிப்பது  என்பது சமீபத்தில் பெரிய விஷயம்..

கோடீஸ்வரன் முதல் தெருகோடியில் வாழ்பவனையும் ஒரே உணர்வில் இணைத்து விடும் வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. அவ்வாறான சினிமாவை எடுக்கக்கூடிய வித்தை தெரிந்த இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்தின் நேரடி தியேட்டர் ரிப்போர்ட்…

முடிஞ்சா இது மாதிரி படம் எடுங்க… இல்லேன்னா கோயில் வாசல்ல போய் பிச்சை எடுக்க சொல்லுங்க அந்த so called popular tamil directors -ச!
…கல்லூரி மாணவன்.

ஜீரணிக்க முடியலைங்க.. படம் மிரட்டியிருக்காரு பாலா..
…ஆட்டோ ஓட்டுனர்.

Its completely a cult movie of recent times(even in recent decades of indian cinema)..
…திரைமொழி படிக்கும் மாணவன்.

மனநலம் குன்றியவர்களை படத்தில் உன்னத கலைஞர்களாக வாழவைத்திருகிறார் பாலா!
…நாடக நடிகர்.

இந்த ஆளால மட்டும் தான் இப்படி படம் எடுக்க முடியும்.. போட்ட லீவ்வுக்கும் கொடுத்த காசுக்கும் அர்த்தம் தரக்கூடிய படம்.. அவ்ளோ தான் சொல்ல முடியும் இப்போ.. மனச கசக்கிட்டாங்க பாலா..
…சாப்ட்வேர் எஞ்சினியர்.

இந்த படம் ஓடலைன்னா இனிமே தமிழ் சினிமாவுல படம் எடுக்கிறதே வேஸ்ட்!
…சென்சார் போர்டு அதிகாரி பாபு ராமசுவாமி ( இந்த தகவல் மட்டும் ஏற்கனவே படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் பாபு ராமசுவாமி சொன்ன செய்தியை யூகி சேது பகிர்ந்து கொண்டது..)

தற்போதைக்கு இத்துடன் முடித்து கொள்கிறோம்..
விரைவில் விமர்சனத்துடன்..

January 28, 2009

வால்ஸ் வித் பஷிர்..திரை விமர்சனம்

Filed under: சினிமா — rasanaikaaran @ 8:58 am

waltz_with_bashir111

கோல்டன் குலோப்பின் அயல் சினிமாவின் விருதையும்  பெற்று ஆஸ்காரின் வாசலில் நின்று  உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டுயிருக்கும்  இன்னொரு படம் “வால்ஸ் வித் பஷிர் (waltz with bashir)” எனும் இஸ்ரேலிய மொழி திரைப்படம்.இதன் சிறப்பு உலகிலேயே முதல் முறையாக வந்து இருக்கும் அனிமேஷன் ஆவணப் படம் என்பது.

இஸ்ரேலிய போர் வீரரான அரி போல்மேன் இயக்கியிருக்கும் வால்ஸ் வித் பஷிரில்,  இஸ்ரேலின் ஆதரவுடன், மேற்கு லெபனோனில் 1980 களில் நடந்தேறிய சப்ரா சாட்திலா  கொலைவெறி  தாக்குதலுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று தனது  மறந்து போன அந்த கொடூர அனுபவத்தை நினைவு கொள்ள, போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களை தேடி செல்கிறார் அரி போல்மேன்..என ஆரம்பிக்கிறது இந்த திரைப்படம்.

BBCயின் தகவலின் படி செப்டம்பர் 16முதல்18, 1982 வரை மேற்கு லெபனோனில் இஸ்ரேலிய படையின் கண்காணிப்பில் அடைக்கலம் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனர்கள்  சுமார் 800 பேர்கள் சப்ரா மற்றும்  சாட்திலா இடங்களில் கிறிஸ்துவ பாலங்கிஸ்ட் குழுவால் கொடூரமாக கொல்ல ப்பட்டனர்.

சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு முன் லெபனோன் நாட்டு தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த  இஸ்ரேலிய ஆதரவு கிறிஸ்துவ பாலங்கிஸ்டின் தலைவர் பஷிர் ஜெம்மையில் பாலஸ்தீனர்களால்  கொள்ளப்பட்டார். அதற்கு பழிவாங்கவே  இந்த கொலைவெறி  தாக்குதலுக்கு இஸ்ரேல் முழுமையாக ஆதரவு அளித்து என்றும் தெரிவிக்கிறது.

மறந்து போன இந்த சம்பவம் தன் கனவில் வந்து போவதை உணர்ந்த அரி போல்மேன், அதனின் உண்மையை அறிய லெபனோனின்  மேற்கு மீரூட்டுக்கு செல்கிறார். அங்கு போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களையும், மனதத்துவ நிபுணர் ஒருவரையும் மேலும் ரான் பென் யிஸ்காய்  எனும் பத்திரிகையாளர் ஒருவரையும் சந்தித்து உரையாடி உண்மையை கண்டறிவது தான்   மீதி கதை.

கலை இயக்குனர் டேவிட் போலன்ஸ்கீ, அனிமேஷன் இயக்குனர் யோனி குட்மேன் மற்றும் இசையமைத்த மாக்ஸ் ரிசெர் ஆகிய மூவரும்   அரி போல்மேனுடன் இத்திரைபடத்திற்காக நான்கு வருடம் உழைதிருக்கின்றனர்.  முதலில் 90 நிமிடத்திற்கான படத்தை எடுத்துக்கொண்டு, பிறகு ரோடோஸ்கோபி முறையில் திரைக்கதைக்கேற்ப  அதனை 2300 வரைபடங்களாக பிரித்து காமிக் கதபாத்திரங்களுக்கான நகர்வை Flash, 3D போன்ற தொழில்நுட்பங்களின் துணையுடன் திரை சுருளிலேயே  வரைந்துள்ளனர்.

அனிமேஷன் படம் தானே என்று பார்வையாளர்களும் அலட்சியமாக கருதாமல் காட்சிகளில் ஒன்றி வரலாற்றின் உண்மைகளுடன் ஆராய தூண்டுவது  படத்தின் பெரிய வெற்றி. மேலும்  உண்மை சூழலில் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் கதைகேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவது, வந்த ஏனைய  காமிக்ஸ் திரைப்படங்களை காட்டிலும்  புதுமையாகவும் உணர்வுபூர்வமாகவும்  உள்ளதை உணர முடிகிறது என தர டிக்கெட் தெரிவிக்கிறார்.

January 20, 2009

Slumdog Millionaire..திரை விமர்சனம்

Filed under: சினிமா — rasanaikaaran @ 2:47 am
Tags: , , , ,

slumdog_banner1

கலைஞனுக்கு  ஜாதி, மொழி, நாடு என்று எந்த அடையாளமும்  கிடையாது.. வாழ்க்கை பயணத்தில் தான் பார்த்த அழகான அல்லது அழுக்கான விஷயங்களை, தன்  கலை வல்லமையின் வாயிலாக  கட்டாயம் பதிவு செய்து காலத்திடம் ஒப்படைத்து விடுவான், அவன் ஒரு கட்டத்தில் நின்றுவிட்டாலும்.. அவன் கலை தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்கும் காலத்தின் பதிவுகளில்.

அப்படி மலர்ந்து வரும் வல்லரசு இந்தியாவின் இன்னும் வளராத ஒரு தாழ்வான பக்கத்தினை இந்தியரான விகாஸ்  ஸ்வருப், தன் எழுத்துகளால் பதிவு செய்த Q&A  எனும் நாவலை பிரிட்டனின் பிரபல இயங்குனர் டேனி பாயல் அழகாவே  Slumdog Millionare ராக  படம் பித்து, உலகின் கவனத்தை  ஈர்த்து விட்டார் என்று சொல்லியே ஆகா வேண்டும். Fox Searchlight Pictures தாயரித்த இந்த ஆங்கில படம் தற்போது உலக சினிமா அவார்டுகளை அள்ளிக்கொண்டு இருக்கிறது!

9164_6601370481

இந்தியா எப்போதுமே  இப்படி வறுமையான வாழ்வியலையும்  கொண்டது தான் என்று இந்த படம் நேரடியாக உலகுக்கு உரக்க சொன்னாலும், இந்த படத்தின் மூலம் இந்தியாவின் கலை திறமையும், கலாசார ரசனையும் மீண்டும் மேற்கத்தியவர்கள் பரவலாக ரசிக்க தொடங்கிவிட்டனர்  என்றும் சொல்ல வேண்டும். அவர்களுக்கு எப்போதுமே பார்வை கோளாறு.. அவர்களின் பார்வைகள் அப்படி தான்..

அதை விட்டு விட்டு,  அவர்கள் போட்டு  கொடுத்த கலை தடத்தை பயன்படுத்தி நம்மவர்கள்  முயற்சி செய்தால், இன்று  கமர்ஷியல் சினிமாக்களில் மட்டும் கொடிகட்டி பறக்கும் நமது  சினிமா, நாளை ஈரானிய சினிமாவுக்கு போட்டியாக இந்திய சினிமா உலக சினிமாவை அதிர வைக்கும் என்பது நிகழ கூடிய உண்மை.

கதை..
இந்தியாவில் நம் எல்லோருக்கும்  பரிச்சயமான கோன் பநேகா க்ரோர்பதி ( Who wants to be a millionare? ) நிகழ்ச்சியில் பங்கேற்க்கும் ஜமால் என்கின்ற மும்பை சேரி வாழ் இளைஞன்,  எவ்வாறு போட்டியின் ஒவ்வொரு கடினமான  கேள்விகளுக்கும், தன் வாழ்கையில் நடந்த நிகழ்வுகளை தொடர்புடுத்தி, அதனுள் எதிர்பாராமல் ஒளிந்திருந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்தி  பதில் அளிக்கிறான் என்பது தான்.

8942_12271001009

இந்நிகழ்ச்சியில் எப்போதுமே பங்கேற்கும் போட்டியாளரும், பார்வையாளர்களும்  படபடத்து போய் காண்பது போட்டியின் வாடிக்கையான விஷயம், ஆனால் படத்தில் தொகுப்பாளர் ஜமாலின் பதில்களை கண்டு அதிர்ச்சியில் தத்ருபமாக உறைந்து படபடக்கிறார்.

ஒரு கட்டத்தில் கால் சென்டரில்  டி வாங்கி கொடுக்கும் வேலை பார்ப்பதாக சொல்லிக்கொள்ளும் ஜமால், எவ்வாறு எல்லா கேள்விக்கும் எளிதாக பதில் அளித்து கொண்டு இருக்கிறானே?.. எதோ ஏமாற்று வேலை நடக்கிறது!  என்கிற சந்தேகத்தில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரேம் குமார் (அனில் கபூர் ), கடைசி கேள்விக்கு பதிலளிக்கும் முன் காவல் துறைக்கு  விஷயத்தை தெரியப்படுத்துக்கிறார். இந்திய காவல்துறை வந்து.. எவ்வாறு விசாரிக்கும் என்று தான் அனைவருக்கும் தெரியுமே. காவல் துறை அதிகாரியாக வரும் இர்பான் கான் தன் கடமையை தவறாமல் செய்கிறார். அவர் ஜமாலுக்கு கொடுக்கும் third டிகிரி  கொடுமைகள் நமக்கு ஷாக் அடித்து வலிக்கிறது.

1634_695761361

விசாரணையில் அவன் விவரிக்கும் சம்பவங்களும்.. கொடுமையான அனுபவங்களும்.. அவையனைத்தும் நிகழ்ச்சியின் சாதரண கேள்வி பதில்களுக்குள் எதிர்பாராமல் சிக்கி இருப்பதையும், அந்நிலையிலும்  உண்மையை எனும் ஒரே உடமையை தாங்கி அவன் வாழ்ந்திருப்பதையும்  உணர்ந்த  காவல்துறை அதிகாரி கான், ஜமாலை விடுதலை செய்கிறார்.

விசாரணை முடிந்து, குற்றவாளியில்லை என நிரூபணமாகி,  மீண்டும்  நிகழ்ச்சியின்  கடைசி கேள்விக்கு பதில் அளிக்க வருகையில் … கடைகள் …வீடுகள்…பரபரக்கும் வீதியென ..மும்பை நகரமே  மட்டுமல்லாது இந்தியாவே  டிவி முன் சரண் அடைந்து நிற்கிறது…  டிராபிக்  சிக்னலில் ஜமால் காவல்துறை ஜீப்பில் அமர்ந்து இருப்பதை கண்டு  அவனின் சமுதாய அடையாளங்களான  சேரி மக்கள் “உன்னால் முடியும்,ஜமால்”, என ஆசிர்வதிக்கும் காட்சியை பார்க்கும் போது  நம் கண்களும் நனைகிறது. சபாஷ்! டைரக்டர் சார்!

மூன்று பருவங்களை முன்னுருத்தி கதை நகர்வதால் அதற்கான வயதிலேயே சிறுவர்களையும் சிறுமிகளையும் மற்றும் நடிகர் நடிகையையும் தேர்ந்தெடுத்து நடிக்கவைத்திருக்கிறார்கள்.

287_118048196321875_109587993604952_472235781

ஜமால் ..இந்த கதாபாத்திரத்தை  தாங்கி வாழ்ந்த சிறுவர்கள் அனுஷ், தனே ஹேமந்த் முதல் இளைஞர் தேவ் படேல்வரையிலான நடிகர்கள் என்று சொல்லுவதே தவறு!…அனைவரும் மனதில் இணைந்தே விட்டார்கள்.. அவர்கள் காட்டிய ஏக்கம், சோகம்,சிறுவயதிலிரிந்தே லத்திகாவின் மீது இழையோடிய காதல், அண்ணனின் தூரோகத்தை  மன்னிக்காத  வேகம்,  காவல் துறை அதிகாரியிடம் சிக்கி சித்தரவதை படும் வேதனை, கடைசியாக தொகுப்பாலரின் கேள்விகளை எதிர்கொளும் நம்பிக்கை என் அடுக்கிக்கொண்டே போகலாம்… அவர்கள் வெளிக்காட்டிய எண்ணற்ற உணர்வுகுகள் நம்மை ஜமாலுக்கு ஆதரவாக கதைக்குள் கட்டி போடுகிறது.

2245_4490622636

அதே போன்று லத்திகாவாய் வரும் பெண்கள்  ருபினா அலி, தன்வி கணேஷ்,  பிரெய்தா பின்டோ மூவரும்  தங்கள் சூழ்நிலைகளுக்கு கைதியாகி ஒவ்வோறு  முறையும் சிதைந்து    மீண்டு வெளிவரும் இடங்களில் நம்மை பரிதவிக்க வைத்திருகிறார்கள் .

அடுத்து அண்ணன்  சலீம் மாக வரும் சிறுவர்களும், நடிகரும்(அஸாருதின் முகமத், அஷுடோஷ், மதுர் மித்தல்)  சின்ன  வயதிலேயே வில்லத்தனமும், அசட்டு சிரிப்புடன் செய்யும் கலவாணித்தனமும்,  பேராசையும், கிரோத மும் பிறகு பாசத்துடன் தம்பியுடன் லத்திகாவை சேர்க்கும் தருணங்களில்லும் அசத்தி விட்டனர். படத்தில் சிறு காட்சிகலாயினும் வந்து போன அனைத்து நடிகர்களும் அவ்வாறே!


இசை ஏ. ஆர். ரஹ்மான்.. மேற்கத்தியவர்கள் தான் டார்கேட்  என்பதால் அவர்களுக்கு பிடிக்கும் வண்ணம்,  மனுஷன் மேற்கத்திய hiphopping இசையோடு  சம்பிரதயதுக்காக இந்திய மற்றும் பாரசீக இசையையும் கலந்தடித்து கவரத்தான் செய்கிறார். படத்தின் காட்சியமைப்புகள் காண்டிட் ஸ்டைலில் ஆண்டனி டொட்  மென்ட்லின்   ஒளிப்பதிவு பயணிப்பதால் அவருக்கு அதிகம் வேலை கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. ரஹ்மானை விட இதில் மியா இசையமைத்த Paper Planes மற்றும் ஒ சாயா பாடலும்  தான் மேற்கத்தியவர்களிடம்  அதிகமாக கவரப்படுள்ளது. ரஹ்மானை பொறுத்தவரை மொசம்-எஸ்கேப் இசையில் மெதுவாக மெருகேறி அதிக தாள தட்டில் சிதார் இசை தப்பிப்பது போன்ற இசை சேர்ப்பு அருமை, கடைசியாக படத்தில் வரும்  ஜெய் ஹோ! பாடல் யாரையும் ஆட்டம் போட வைத்துவிடும்.

SlumDog Millionare..

திரைக்கதையின் பயணமும்…அதனை பதிந்த விதமும் பார்வையாளர்களை பதப்பதைக்கும் மனதோடு சீட்டின் நுனியில் கனத்த மனதுடன்  அமர வைத்து விடுக்கிறது..

படமே விசாரணையில் தொடங்குவதால், ஜமால் தான் பதிலளித்த பின்னணியை சொல்லும் போது..  அனைத்து பதில்களுக்கும்,  அவன் வாழ்கையில் நடந்த ஒரு நிகழ்வை நோக்கி, non linear narative என்ற திரை மொழியின் கிளை காட்சிக்குள் புகுந்து, அவனின் ஒவ்வொரு அனுபவத்தையும் சொல்ல  பயணிக்கிறது சிமோன் பியூபோவின் அருமையான  திரைக்கதை. அதனை டாக்குமென்றி  பாதிப்பில் உண்மையாக நடந்தேறி இருக்கும் என்ற நம்பும்  தோணியில், சில உண்மையான மும்பை கலவரங்களையும் சேர்த்து  காட்சிகளில், சேரி வாழ்வியலையும், அதன் பாதிப்புகளையும், நிகழ்கால கேள்வி பதில் நிகழ்ச்சியோடு  இணைத்து  காட்சியாக வரைந்திருக்கிறார் இயக்குனர் டேனி பாயல்.

மனிதனின் நினைவுகள்..எப்போதும் இழப்புகளை மிக ஆழமாக பதிவு செய்துவிடும் என்ற இயற்கையின் எதார்த்தத்தை தாண்டி, தன் வழக்கமான ஹாப்பி எண்டிங் பார்முலாவை மீண்டும் பயன்படுத்தி மிக ஆழமாக..எதார்த்தமாக.. அழகாக ஞாபகமாக்குகிறார் இயக்குனர் டேனி பாயல் என்று அட்டகாசமாய் வாழ்த்துகிறார் நம் தர டிக்கெட் SlumDog Millionare படம் முடிந்து வெளியே வரும்போது!


January 6, 2009

புத்தரின் பெயரால்?

Filed under: சினிமா — rasanaikaaran @ 9:49 am
Tags: ,

buddha

“புத்தரின் பெயரால்(in the name of Buddha)”.. இந்த ஆங்கில  திரைப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஈழத்தில் நடந்தேறி வரும் இன படுகொலைகளையை அப்பட்டமாக காட்சியாக்கி, அதன் அவலங்களையும், வலிகளையும் மையமாக கொண்டது இத்திரைப்படம்.  இது மாதிரி உலக அளவில் சத்யம்  பேசும் படங்கள் எல்லாம்  காங்கிரஸ் கோமாளிகள் பெரியக்கதுக்கு பிடிக்காது அல்லவா! இரண்டு அயல் விருதுகளை பெற்ற “in the name of Buddha”  திரைபடத்தை எடுத்தவர், ஒரு கேரளத்தை சேர்ந்த இந்தியர், பெயர் ராஜேஷ் டச்ரிவேர்.

கதை.. தமிழ் படித்த டாக்டர் சிவா என்பவர் பிரிட்டன் விமான நிலையத்தில் போய் இறங்குகிறார், சரியான சான்றிதழ்களும், தகவல்களும் இல்லாமல் பிரித்தானிய தூதரகத்தில் சிக்கி கொள்கிறார்.. அவரிடம் காரணம் கேட்கும் வயதான தூதரக அதிகாரியின் கண்கள் விரிவடைவது மட்டுமல்ல, நமது கண்களும் அதிர்ச்சியில் நீர்வீழ்ச்சியாகிறது.. ஈழத்தின் கொடுமைகள் காட்சியாகிறது.. கடைசியில்…பிரித்தானிய அரசியல் அகதி என தூதரக அதிகாரி டாக்டர் சிவாவுக்கு அகதிகள் முகாமின் சேர அனுமதி எண் வழங்குகிறார். படம் முடிக்கிறது! நம் மனதில் கவலைகள் மேலும் படர்கிறது!

நான் எழுதி, நீங்கள் படித்து கொண்டு இருக்கும் இந்த வேளையில்லும் ஒரு உயிர் இரத்தம் சிந்தி கொண்டுதானிருக்கும் ஈழத்தில்!

முடிந்தால் படத்தை பார்க்கவும், இல்லையேல் வாய்மொழியாக ஈழத்தில் நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும்!

ரசனைக்காரனுகாக கனத்த மனதுடன் தர டிக்கெட்!

“புத்தரின் பெயரால்(in the name of Buddha)” படத்தின் சில திரை காட்சிகள்..

January 4, 2009

இயக்குனர் பாலாவின் பேட்டி ..

nkimage181


பொங்கலுக்கும் தீபாவளிக்கும் ரிலீஸ் பண்ண என் படம் கரும்போ பட்டாசோ அல்ல. நான் நினைக்கும் வித்த்தில் படம் வந்தால்தான் ரிலீஸ் செய்வேன் என்கிறார் இயக்குநர் பாலா.


உலக சினிமாவுக்கு இணையாகப் பேசப்படும் படங்களைத் தரும் பாலா பொதுவாக யாருக்கும் பேட்டி தருவதில்லை. வெகு அரிதாகவே பேசியிருக்கிறார். இப்போதும் பேட்டி எதுவும் யாருக்கும் தர முடியாது என்று கறாராக்க் கூறிவிட்டார் பாலா.

இந்த தருணத்தில் முன்பு அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியிலிருந்து சில பகுதிகளைத் தருவது இப்போது பொருத்தமாக இருக்கும்…

யார் கடவுள்?

இது கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற ஆத்திக-நாத்திக விளையாட்டு இல்லை. பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கைகளையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரீகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம். ஒரு எளிய கேள்வியை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். படம் பார்த்தால் பதில் கிடைக்கும். என்னை, உங்களை, நம்மை, நம் உலகத்தை அது இன்னும் தெளிவாக்கும்!

ரெண்டரை அடி உயரமே இருக்கிற என் பரமசிவனுக்கு 54 வயசு. அதுக்கும் கம்மியா இருக்கிற என் 30 வயசு பார்வதி, இதயக் கோளாறு உள்ள குழந்தை. உடம்பு போலவே, மனசும் இன்னும் குழந்தையாவே இருக்கு. இப்படி இன்னும் ரெண்டு டஜன் மனிதர்களை இதில் நடிக்க வெச்சிருக்கேன்.

பொறந்ததில் இருந்து இன்னும் வீட்டு வாசலைத் தாண்ட முடியாத கடவுளின் குழந்தைகளை, ஊர் உலகம் எல்லாம் பார்க்கட்டும்னு கூட்டிட்டு வந்திருக்கேன். மேனி அழகைச் சிவப்பாக்க சிவப்பு க்ரீம் பூசுகிற உலகமே, வந்து பாருங்கடா இவங்களையும்னு காட்ட வந்திருக்கேன்.

ஊனத்தோடு பொறக்கிறது சாபம் இல்லை; சத்துக் குறைச்சல். சரி, நல்ல சாப்பாடு நாலு வேளை சாப்பிட்டிருந்தா, ஊட்டச் சத்தோடு இருக்கலாம். ஒருவேளைச் சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஆத்தாளுக்குப் பொறந்தா, ஓரமாக் குழி தோண்டிப் பொதைச்சிரலாமா? உடம்பு, மனசு, மூளைன்னு எல்லாமே சிதைஞ்சிருக்கிற அந்த உயிர்களின் சிரிப்பே, இந்தப் பிரபஞ்சத்துக்கான ஆன்மிகம்!

”ஒருமுறையா இருமுறையா பலமுறை
பல பிறப்பெடுக்கவைத்தாய்
புதுவினையா பழவினையா
கணம்கணம் தினம் எனைத்
துடிக்கவைத்தாய்
பிண்டம் என்னும் எலும்பொடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
ஐயனே… எம் ஐயனே!”

‘ஊர்ல உலகத்தில் எவ்வளவோ பிச்சைக்காரங்க இருக்காங்க. எதிர்ப்படுற எல்லா பிச்சைக்காரங்களுக்கும் நாம் உதவுவதில்லை. பாவப்பட்டோ, இரக்கப்பட்டோ, புண்ணியத்துக்கோ, நாம போடுற சில சில்லறைக் காசுகளோட, அவங்களை ஒதுக்கிடுறோம்.

‘அய்யா தர்மதொர, அம்மா மகராசி!’ன்னு ஒரு வாய் சோத்துக்காக நம்மிடம் கையேந்தி நிக்கிற பாவப்பட்ட மனிதர்களைப் பத்தி யோசிச்சிருக்கோமா? பிச்சை எடுக்கிறது என்ன குலத் தொழிலா? அவங்க எப்படிப் பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தாங்க?

பெத்த பிள்ளைங்களால விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த துக்கம் தாங்க முடியாம, காவி வேட்டிக் கட்டி கௌரவமா பிச்சையெடுக்கிறது எவனோன்னு போறோம்… அவன், நம்ம அப்பனா இருந்தா? மானத்தைக் காப்பாத்திக்க வழி தெரியாம, பிச்சையெடுக்கிற அவமானத்தோட அலையுற பொம்பளை, நம்ம அம்மாவா, அக்காவா இருந்தா?

அப்பனோ ஆத்தாவோ உடம்புத் திமிர்ல யாரோடவாவது ஓடிப் போக, ஆதரவுக்கு யாருமில்லாம, எச்சி இலையை நக்கித் திங்கிறது நம்ம புள்ளையா இருந்தா? அப்பத் தெரியும்ல அந்த வலி!

நரகலைத் திங்கிற நாய் மாதிரி ஒரு ஈனப் பொழப்பு. ஆனா, அந்த எளிய மனிதர்களிடம் இருக்கிற பண்பு, படிச்ச பல பெரிய மனுஷங்களிடம்கூட இல்லை என்பது நான் உணர்ந்த உண்மை!”

ஆர்யாவின் தோற்றமும் பூஜாவின் மாற்றமும் பற்றி…

ஆங்… ருத்ரனா வர்றான் ஆர்யா. அவனை ஒரு ஜாலியான பையனா தான் பார்த்திருக்கு தமிழ் சினிமா. இதுல ஆர்யா, அவன் சினிமா வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு வந்துட்டான். உன்னதம், உன்மத்தம்னெல்லாம் சொல்வாங்கல்ல… அப்படி ஒரு உழைப்பு. ரெண்டு வருஷத்தில் வேற ஒரு ஆளா உருமாத்திட்டேன். க்ளைமாக்ஸ் ஃபைட் ஒண்ணை ஒரு முழு மாசமும் எடுத்தேன். ரெண்டே பேரு… காத்துல கை வீசுறதெல்லாம் கிடையாது. அடி ஒவ்வொண்ணும் நிஜமாவே விழும். மூஞ்சி முகரைஎல்லாம் பொளந்து, முட்டி பேந்துன்னு இதுவரைக்கும் சினிமா பார்த்திராத ஆக்ஷன்!

அம்சவல்லியா வருது பூஜா. சின்சியரான பொண்ணு! சிரிச்ச முகமாவே மொத்தப் படமும் முடிச்சுக் கொடுத்துச்சு. கடைசி வரைக்கும் தன் கஷ்டங்கள் எதையுமே காட்டிக்கலை. வலியும் ஜீவனுமான ஒரு கேரக்டரை, அப்படி ஒரு எனர்ஜியோடு செய்திருக்கு. தான் சினிமாவில் இருந்தேன்னு பெருமிதமா சொல்லிக்கிறதுக்கு, அதோட ஆயுசுக்கும் இந்த ஒரு படம் போதும்!

ராஜாவின் பாடல் மனசை அறுக்கிறது.

ஆர்யா, பூஜா போல என் கனவு மொத்தத்தையும் தன் கண்களில் சுமந்தவர் கேமராமேன் ஆர்தர் வில்சன். காசியில், ராஜாவின் பாடல் நாகராவில் ஓடியபோது, வந்து உட்கார்ந்த ஒரு வடநாட்டுச் சாமியார்… அந்த ஏழரை நிமிஷங்களும் வானம் வெறித்து, அருவி போலக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். பாடல் முடிந்ததும், என் தலையை தொட்டு, ‘இதோட அர்த்தம் எனக்குப் புரியும்’ என்று சொல்லிட்டுப் போனார்.

மொழி தெரியாத உலகத்தையும் விழி கசியவிடுகிற இளையராஜா என்னோடு இருக்கார். அது போதும் எனக்கு!

15 வருடங்கள்… மூன்றே படங்கள். நாலாவது படமான ‘நான் கடவுள்’ உருவாக்கத்திலும் இவ்வளவு காலம் எடுத்துக்கறீங்களே, உங்க ஃபிலிம் மேக்கிங் ஸ்டைலே இதுதானா?

”தீபாவளி, பொங்கல்னு படம் ரிலீஸ் பண்ண நான் தர்றது பட்டாசோ, கரும்போ இல்லை. எந்த விஷயத்தை எடுத்துக்கணும், அதை எப்படிச் செய்து முடிக்கணும்னு எனக்குத் தெளிவு கிடைக்காம, அதை நான் செய்ய மாட்டேன். இருநூறு லாரி, முன்னூறு கார்களை வெச்சு சேஸிங் படம் எடுக்கிற பரவசத்தை, படபடப்பைவிட, ரெண்டு மனிதர்களைத் திண்ணையில உட்காந்து பேசவெச்சே பிரமாதப்படுத்திட முடியும்னு நினைக்கிறேன். அது நான் நினைச்சவிதத்தில் கிடைக்கும் வரை, அந்த ரெண்டு பேரையும் திண்ணையைவிட்டு எழுந்திருக்க விட மாட்டேன். அவ்வளவுதான் விஷயம்!

இதோ, ‘நான் கடவுள்’ படத்தில், ஆர்யா, பூஜாவைத் தவிர, அத்தனை பேரும் புதுமுகங்கள். உடல் வளர்ச்சி இல்லாத, மன வளர்ச்சி இல்லாத மனிதர்கள். அவங்க கையில வசனப் பேப்பரைக் கொடுத்து, ‘பேசுப்பா!’னு படம்பிடிக்க முடியாது. அவங்களோட பழகி, அவங்க நம்மோட பழகின்னு ஒவ்வொருத்தரையும் ஒரு குழந்தை போலப் பார்த்துக்கணும். ஆறு மாச ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, இப்போ அவங்க அத்தனை பேரும் என் குடும்பம்.

இன்னொரு பக்கம் காசி சாமியார்கள். அகோரின்னு சொல்லப்படுகிற, நர மாமிசம் சாப்பிடுற சாமியார்களையும் நடிக்க வெச்சிருக்கேன்.

இப்படி ஒரு படத்தை உருவாக்குற வலியை, வார்த்தைகளில் புரியவைக்க முடியாது. ஏன்னா, இது வித்தியாசமான படம்னு சொல்றதே பழைய வார்த்தையாகிப்போச்சு. இது நாம் கருணை காட்டாத, நம்மால் புரிந்துகொள்ளப்படாத, கடைசி மனிதர்களின் உலகம்!”

சரி, கடவுளை எப்போ கண்ணுல காட்டுவீங்க?’

”கூடிய விரைவில்னு பொதுவான வார்த்தைகளில் பொய் சொல்ல விரும்பலை. விஷயம் என்னன்னா, வித்தை பழகின அளவுக்கு நான் வியாபாரம் பழகலை. ஒரு வியாபாரி போலப் பேரம் பேசவும் எனக்குத் தெரியாது. இந்தப் படத்துக்கான செலவு, நினைச்சதைவிட, அதிகமாகிப் போச்சு! அத்தனையும் தவிர்க்க முடியாத செலவு. என் தரப்பில் இருந்து சில கோடிகளை வாங்கிப் போட்டு, படத்தை முடிச்சிருக்கேன்.

‘ஹே ஜென்ம மாத்ரம் நா
ஹிதா அபி ஜென்ம நபவிஷ்யதி’னு சொல்வான் என் ருத்ரன்.

அப்படி ஒரு விடுதலையை வேண்டிக்கிற அளவுக்கு, இந்தப் படத்தை உருவாக்குவதில் உழைச்சிருக்கோம். இயல்பின் ஆழத்தையும் அதன் அர்த்தத்தையும் பிடித்துவிட்டேன் என்பதுதான் என் பெருமிதம்!

January 2, 2009

ஹிந்தி கஜினி..படவிமர்சனம்

ghajinihindi

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் அஸ்வினி தத், இசையமைப்பாளர்  ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், எடிட்டர் ஆண்டனி, சண்டைபயிற்சி  இயக்குனர்கள்   பீட்டர் ஹெயன் மற்றும் ஸ்டண்ட் சிவா, சவுண்ட்ஸ் மேற்பார்வையாளர் சமீபத்தில் நாம் இழந்த, மறைந்த H.ஸ்ரீதர் அவர்கள்   என்று மீண்டும் சவுத் இந்தியன்ஸின் திறமைகள், வடநாட்டு மக்களை  வாய் பிளந்து அதிசியக்க  வைத்திருக்கிறது நமது தமிழ் கஜினியின் மறுபதிவான  ஹிந்தி  கஜினி தான்!

அதற்கு காரணம்..
ஆமிர் கான் எனும் இந்தியன்!

திறமை எங்கு இருந்தாலும் அதை தேடி, பாராட்டி அதை பெற்று படமாக்குவதில், ஈகோ இல்லாத நம் நாட்டு கலைஞன்! உண்மையாகவே பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் நம் நாட்டின் இரண்டாவது ஆஸ்கார் நம்பிக்கை! (முதலாவது ஆஸ்கார் நம்பிக்கைக்குக் கூட இந்த பண்புகள் இருந்ததாக தெரியவில்லை!)

கதை…அதே கதை தான்.. ஆனால் கிளைமாக்ஸ் மாற்றம் பெற்றுள்ளது, இந்திய திரையின் பழைய பல்லவியான பழிவாங்கும் படலம் புதுப்பொழிவில்! என்ன ஒரே சந்தோசம்.. கொஞ்சம் எதார்த்தத்தை தொட்டு பழிவாங்குகிறார் ஹிந்தி கஜினி!

ஆமிர் கான்.. சிறந்த நடிப்பை (சூர்யா போல் அதிகமாக சிரமப்பட்டு செய்யாமல்), அவருக்கான அதிர்வில் வெகு இயல்பாக நடித்து நம்மை வசியப்படுத்துகிறார்! அதே போல ஆட்டத்தில் நம்ம சூர்யா exercise பண்ணி சிரிக்க வைத்து போல் இல்லாமல் நளினமாக அவருடைய ஸ்டைலில் நடனத்தை பண்ணியிருக்கிறார். பாடல்களில் அழகாக சிரித்தே!.. மீண்டும் மீண்டும் பெண்களின் உள்ளங்களில் குடியேறுக்கிறார். (யப்பா ஆமிரு இந்த வித்தைய சொல்லி கொடுப்பா!.. பொறாமையா இருக்குப்பா! )

அசின்.. அதே நடிப்பு தான்..என் ஹிந்தி தோழி நன்றாக நடித்திருக்கிறார் என்று சொன்னதை மனமில்லாமல்  ஏற்றுக்கொள்கிறேன்! ஜியா கான்  நயன்தாராவின் அதே பங்கு நடிப்பு (??)! புரிந்துகொள்வீராக!

ஹாரிஸ் ஜெயராஜின் அசத்தலான ஆர்பாட்டமான இசையை அமைதியாக அளந்து கொடுத்திருக்கிறார்  இசையமைப்பாளர்  ஏ.ஆர். ரஹ்மான் ஹிந்தி  கஜினிக்கு. குசாரிஷ் மற்றும் பேக்கா இரண்டு பாடல்கள் கேட்கும் போது மட்டுமல்ல பார்க்கும் போதும் மனமயக்கும்.

ஹாரிஸ்காக நான் குடை பிடிக்கவில்லை .. ரஹ்மானுக்கு படத்தில் அதிகம் வேலையில்லை என்பது போல் பிண்ணனி இசையும் அப்படியே follow on செய்யப்பட்டுள்ளது. அந்த இரு  பாடல்களின் இசையை  வைத்தே பிண்ணனியில் பின்வாங்கியிருக்கிறார். ஆனால் ரஹ்மான்! அந்த  இரு  பாடல்களையும் கேட்கலாம்..கேட்கலாம்..கேட்டுக்கொண்டே  இருக்கலாம்!

அடுத்த முக்கிய மூவருக்கு சபாஷ் என்றால்! அவர்கள்..

அதிர்வு அதிகமில்லாமல், அழகான கலர் செலுலாய்ட்டாய் ஹிந்தி கஜினியை படம் பிடித்த  ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்.

அதே விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளை பதிவு பண்ணிய சண்டைபயிற்சி  இயக்குனர்கள்   பீட்டர் ஹெயன் மற்றும் ஸ்டண்ட் சிவா.( என்ன ரத்தவெறி காட்சிகள்  அதே சதவிகிதத்தில்!) ஹிந்தி திரை உலகே அதிர்ந்து போய் பார்கிறதாம் சண்டைக்காட்சிகளை!

வழக்கத்துக்கு மாறாக காட்சிக்கு தேவையான  மெல்லிய அதிர்வோடு  கத்திரிப்போட்ட எடிட்டர் ஆண்டனி.
(ஆமிரும் அசினும் புதிய வீட்டில் கால் தடம் பாதிக்கும் சீன் இன்னும் கொஞ்சம் வேகமாக கத்திரிப்போட்டு இருக்கலாமோ? என்று தர டிக்கெட்டையே யோசிக்க வைத்து விட்டது அந்த ஒரு காட்சி)

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
கடைசி சான்ஸ்.. நல்ல மார்க் எடுத்தே பாஸ் பண்ணிடீங்க  பாஸ்!

(இதை ஏன் நான்  சொல்றேன்னா ஹிந்தி  கஜினிக்கு முன்பு எடுத்த தெலுங்கு ஸ்டாலின் என்கிற கொத்து படம்  எடுத்து சிரஞ்சீவி காருவுக்கே மெகா மகா flop கொடுத்ததை  நினைவில்  கொண்டு தான் ஞாபகப்படுத்தி  சொல்கிறேன்!)

ஹிந்தி கஜினியை பொறுத்தவரை  ஆமிர் கானின் மேற்பார்வையில், உங்கள் இயக்கமும், திரைக்கதையும் பழையதை காட்டிலும் புதிய பொழிவு பெற்று இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை எதார்த்தமான நகர்வுகளுடன் காட்சியமைத்தது! அருமை! ரசிக்கும்படியாகவும் இருந்தது!

மொத்தத்தில் பழைய படம் அதிகமாக ஞாபகபடுத்தினாலும்,அருமையான  ஆமிர் கானின் அழகான  ஆரவார நடிப்பில் அவற்றை மறைத்து ஹிந்தி கஜினியாக  நம் மனதில் மீண்டும் இடம்பிடிக்கிறார் என்று ஹிந்தி தெரிந்த நம்ம தர டிக்கெட் சொல்கிறார்.. சொல்கிறார்.. சொல்கிறார்!

ரசனைக்காரனுக்காக விமர்சனம் எழுதியது தர டிக்கெட்!

படத்தின் உண்மை நிலவரம் : ஹிந்தி கஜினி ஹிந்தி ரசிகர்களுக்கு புதியதோர் அனுபவத்தையளித்து வெற்றி வாகை சூடியுள்ளது! வியாபார ரீதியாகவும் தெலுங்கு குசேலன் இழப்பை ஈடு கட்டும் அளவுக்கு அதிகமாகவே கல்லாவில் காசு பார்க்கிறாராம் தயாரிப்பாளர் அஸ்வினி தத்!

« Previous PageNext Page »

Theme: Rubric. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.